ஒவ்வொரு நொடியும் மரணத்தை சந்தித்தேன்: கொரோனா பாதித்த உடற்பயிற்சியாளரின் பகீர் அனுபவம்
கொரோனா பெருந்தொற்று யாரையும் மிக மோசமாக தாக்கும் என்பதற்கு வாழும் சாட்சியம் தாம் என பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞர் ஒருவர் தமது பகீர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் வசித்து வரும் 33 வயதான தாரிக் ரஹிமின் தமது இளைமைப் பருவம் முழுமையும் உடற்பயிற்சி மற்றும் அதற்கு தேவையான உணவு தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வந்துள்ளார்.
மட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளாக உடற்பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் செய்து வருபவர் தாரிக் ரஹிமின்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார் ரஹிமின். தொடர்ந்து சர்ரே நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது கைகள் திடீரென்று ஊதா, மஞ்சள் மற்றும் நீல நிறமாக மாறிக்கொண்டிருந்தன, இதனால் உடனடியாக அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரு பலமான தொட்டியால் மொத்தமாக தாக்கப்பட்டதாக உணர்ந்தேன்... விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபட்டிருக்கிறேன், தற்காப்புக் கலைகளைச் செய்திருக்கிறேன்… அதிக எடையை உயர்த்தியிருக்கிறேன், ஆனால் எனது 33 வருட வாழ்க்கையில் இதுபோன்று ஒருபோதும் அனுபவித்ததில்லை.
ஒவ்வொரு நொடியும் மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த உணர்வு அது என தெரிவித்துள்ளார் ரஹிமின். இதனிடையே, உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறிய மருத்துவர்கள், ஆக்ஸிஜன் அளவு இனிமேலும் குறையும் என்றால், மருத்துவ ரீதியான கோமாவில் வைத்திருப்பதே தீர்வு எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட தமக்கே இந்த நிலை என்றால், கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதை அப்போது உணர்ந்ததாக ரஹிமின் நினைவு கூர்ந்துள்ளார்.
சுமார் 10 நாட்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர், ஆக்ஸிஜன் செலுத்தும் நிலையில் இருந்து மீண்டதாகவும், பின்னர் படிப்படியாக குணமடைந்ததாகவும் ரஹிமின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 20ம் திகதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் ரஹிமின்.
பழைய நிலைக்கு படிப்படியாக திரும்பினாலும், கொரோனா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் போகவில்லை என ரஹிமின் குறிப்பிட்டுள்ளார்.