2021ஆம் ஆண்டின் மோசமான நிறுவனம் இதுதானாம்!
2021ஆம் ஆண்டின் மோசமான நிறுவனத்துக்கான வாக்கெடுப்பில் ஃபேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது.
அதோடு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கியது. பயனாளிகளில் பாதுகாப்பு தொடர்பாக அந்நிறுவனம் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவற்றின் சேவைகளும் சில முறை முடங்கியது.
கடந்த அக்டோபர் மாதம் சேவை முடங்கியபோது, சில மணி நேரங்களில் பல்லாயிரம் கோடியை மார்க் சக்கர்பெர்க் இழந்தார். இதனிடையே, ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றியது. ஃபேஸ்புக்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் நிறுவனத்தின் பெயர் மெடா என மாற்றப்பட்டது.
இவ்வாறான நிலையில், யாகூ ஃபினான்ஸ் இணையதளம், ’2021ஆம் ஆண்டின் மோசமான நிறுவனம்’ தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,541 பேர் வாக்களித்தினர்.
இதில், சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் 2ஆம் இடத்தை பிடித்தது. அலிபாபாவை விட 50 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்று மிக மோசமான நிறுவனமாக ஃபேஸ்புக் முதலிடம் பிடித்துள்ளது.
யாகூ ஃபைனான்ஸ் கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்கள், பேஸ்புக்கிற்கு எதிராக தணிக்கை புகார்கள் உட்பட பல குறைகளை கூறினர். மறுபுறம், சமூக ஊடக நிறுவனத்தால் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சிலர் புகார் தெரிவித்தனர்.
மேலும் குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் அதன் புகைப்பட பகிர்வு தளமான Instagram இன் தாக்கம் குறித்து பதிலளித்தவர்களில் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
அதேவேளை , 2021ம் ஆண்டின் சிறந்த நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.