தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது? எச்சரிக்கை விடுத்த அதிபர்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் நேற்று 34 ஆயிரத்து 21 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 92 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனாவால் பிலிப்பைன்சில் இதுவரை 52 ஆயிரத்து 736 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டபோதும் அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தொடர்ந்து கொரோனா விதிகளை மீறி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் டொடிரிஹோ டுடர்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் தற்போது இறங்கியுள்ளது. அதன்படி கிராமங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரிக்க உள்ளனர்.
நாட்டில் மொத்தமுள்ள 42 ஆயிரத்து 46 கிராமங்களிலும் கிராம அலுவலர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பட்டியல் தயாராகும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் அறிவித்துள்ளதால் கைது நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.