கனடாவை உலுக்கிய வேன் தாக்குதல் சம்பவத்தில் மீண்டும் ஒரு துயரம்
கனடாவின் ரொறன்ரோவில் 10 பேர் கொல்லப்பட்ட வேன் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த தாயார் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், 65 வயதான Amaresh Tesfamariam என்பவர் கடந்த 28ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பரபரப்பான யோங் தெருவில், நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது Alek Minassian என்பவர் வாடகை வேன் ஒன்றை வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார்.
கனடாவை மொத்தமாக உலுக்கிய இந்த கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயங்களுடன் தப்பினர்.
2018 ஏப்ரல் 23ம் திகதி நடந்த இச்சம்பவத்திற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட Amaresh Tesfamariam கடந்த அக்டோபர் 28ம் திகதி மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த வேன் தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 என அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Alek Minassian மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Tesfamariam சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதையும் கொலை வழக்காகவே கருதப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு காரணமான Alek Minassian மீது இன்னொரு கொலை வழக்கு பதியப்படாது என்கிறது பொலிஸ் தரப்பு.
இதற்கு காலதாமதமே காரணம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கில் Alek Minassian மீது தண்டனை அறிவிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் Tesfamariam பெயரும் நீதிபதியால் கருத்தில் கொள்ளப்படுவார் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.