மூன்று நாட்களில் மூன்று பேரைக் கொன்ற பெண் வழக்கு: விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் முடிவு
கனடாவில், அடுத்தடுத்த மூன்று நாட்களில் மூன்று பேரைக் கொலை செய்தார் ஒரு பெண்.
கனடாவின் ரொரன்றோவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, Trinh Thi Vu (66) என்னும் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
அடுத்த நாள், அதாவது, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, ஒன்ராறியோவில் Lance Cunningham (47) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, ஹாமில்ட்டனில் Mario Bilich (77) என்னும் நபர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
(Submitted by Niagara Regional Police Service)
மறுநாள், இந்த கொலைகள் தொடர்பில் சப்ரினா (Sabrina Kauldhar, 30) என்னும் பெண் கைது செய்யப்பட்டார்.
சப்ரினா மன நல மருத்துவர்களால் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதம் அவர் விசாரணைக்குட்படுத்தப்படும் மன நிலையில் இல்லை என நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சப்ரினாவுக்கு 60 நாட்கள் மன நல சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்தபின், Justice Russell Silverstein என்னும் நீதிபதி, சிகிச்சைக்குப் பின் சப்ரினாவின் மன நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், ஆகவே அவர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.