உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரம்!
கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம் நகருக்குள் பரவியதை அடுத்து, டொரண்டோ நகரின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது.
இதனால், புதன்கிழமை உலகிலேயே மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வடமேற்கு ஒன்டாரியோவின் காட்டுத்தீ புகை தெற்கு நோக்கி நகர்வதால், டொரண்டோ நகருக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுக்கப்பட்டுள்ளது.

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் ஒன்டாரியோ மாகாணம் முழுமைக்கும் புதிய வண்ணக் குறியீட்டு முறையிலான வானிலை எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதிப்பு அல்லது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வானிலை. கடுமையான சேதங்கள் அல்லது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான வானிலை.
சில பகுதிகளில் இந்த மோசமான காற்றின் தரம் வியாழக்கிழமை வரையிலும் நீடிக்கலாம். புகை மூட்டம் அதிகரிக்கும் போது உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ பரிசீலிக்கவும் என சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
உலகளாவிய காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் IQAir அமைப்பின் தரவுகளின்படி, புதன்கிழமை காலை 8 மணியளவில் டொரண்டோவின் காற்றின் தரம் உலகிலேயே மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
புகை மூட்டம் காரணமாகக் கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி அல்லது லேசான இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை மற்றும் காற்று மாசடைவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டு டொரண்டோ மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.