பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்!
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவனை கொலை செய்ததாக 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள வால்வர்ஹாம்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சிறுவனைக் கொன்றதாக ஒரு ஆண் மற்றும் இரண்டு வாலிபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரோனன் காண்டா (Ronan Kanda), 16 வயது, கடந்த புதன்கிழமை (ஜூன் 29) நகரில் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் கொலை விசாரணையை ஆரம்பித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இந்நிலையில், பர்மிங்காமைச் சேர்ந்த ஜோசியா பிரான்சிஸ் (20) மற்றும் மைனர்கள் என்பதால் பெயரிட முடியாத இரண்டு 16 வயது சிறுவர்கள் திங்களன்று வால்வர்ஹாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரோனன் காண்டாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் லேன்ஸ்ஃபீல்டில் உள்ள மவுண்ட் ரோட்டில் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிசிடிவி மற்றும் தடயவியல் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை தொடர்வதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.
அப்போது அந்த பகுதியில் வாகனம் ஓட்டியிருக்கக்கூடிய யாரேனும், தாக்குதலின் டாஷ்கேம் காட்சிகளை வைத்திருந்த பொலிஸிடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனும் 18 வயதுடைய இளைஞனும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.