பழிக்கு பழி வாங்கிய கனடா: அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இனி அதிக வரி
சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ட்ரூடோவின் அறிவிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 4ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி என்ற வகையில் பார்க்கப்படுகிறது. அதேபோல், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
ஏற்கனவே, சீனாவும் அமெரிக்காவுக்கு பதிலடியாக அதிக வரி விதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது, மெக்சிகோவும் இதே போன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கனடாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். "அண்டை நாடுகளுடன் நட்புடன் இருந்தாலே தொழில் சாத்தியமாகும். இதை அமெரிக்க அதிபர் யோசிக்க வேண்டும்" என வணிக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால், "போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த மூன்று நாடுகளும் ஆதரவளிக்கின்றன" என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதால், வரி விதிப்பை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.