சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயார் ; உறுதி செய்த ட்ரம்ப்
சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவிகித வரியை விதித்திருந்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது.
பரஸ்பர ஒப்பந்தம்
இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இருப்பினும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, அவ்விரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
இதனிடையே, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் கடந்த வியாழக்கிழமையில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஜூன் 9 ஆம் திகதியில் லண்டனில் சீனாவின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் பிரதிநிதிகள் சந்தித்து பேசவுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர், லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டில், இரு நாடுகளுக்கு இடையே 58,200 கோடி டொலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், வரிப் போரால் நடப்பாண்டு வர்த்தகம் வெகுவாக சரிந்தமை குறிப்பிடத்தக்கது.