மற்றுமொரு போரை முடிவுக்கு கொண்டுவந்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (26) கையெழுத்தானது.
கடந்த ஜூலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் இல்லாத வகையில், இம்மோதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம்
இதையடுத்து, இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் மத்தியஸ்தம் செய்தனர். இதையடுத்து ஜூலை இறுதியில் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
தற்போது கோலாலம்பூரில் நடப்பாண்டுக்கான 'ஆசியான்' எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
அந்த வகையில், மலேசியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில், தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதனால் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லை பகுதிகளில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.