H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு
H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது.
தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.