ஈரானில் இருந்து திரும்புகையில் கியூபாவும் வீழும்; ட்ரம்ப் அதிரடி
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும் அமெரிக்க கடற்படை ஈரானிலிருந்து திரும்பு வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றிவிடலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவையாகப் பேசியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வந்து ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும், அணுசக்தித் திட்டங்களை நிரந்தரமாக கைவிடக் கோரியும் ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கியூபாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ட்ரம்ப்பின் நகைச்சுவையான பேச்சுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
வொஷிங்டனில் உள்ள பாம் கடற்கரை ஃபோரம் கிளப் நடத்திய ஒரு நிகழ்வில் ட்ரம்ப் பேசுகையில், “கியூபாவுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் கியூபாவில் இருந்து சுமார் 100 யார்டுகள் தொலைவில்தான் நின்றுவிடும். அவர்கள் நன்றி, தோல்வியை ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிவிடுவார்கள்” என்றார்.
கியூபா அரசாங்கத்தில் தலைமையை மாற்றுவதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்.
கியூபாவின் பாதுகாப்பு எந்திரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், எரிசக்தி, சுரங்கம், நிதிச் சேவை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை குறிவைத்து தடைகளை விரிவுப்படுத்தும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், விரைவில் கியூபா மீது அமெரிக்க தாக்குதல் நடத்த டிரம்ப் சூசகமாகத் தெரிவித்திருப்பது உலகளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றது.