கோல்டன் டோம்’ பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா 71 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் – டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘ஐரன் டோம்’ திட்டத்தை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ பாதுகாப்பு மண்டலத்தில் இணைந்து பாதுகாப்பு பெற 71 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா இதில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும், பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
G7 உச்சி மாநாட்டிலிருந்து இடைநடுவில் விலகி வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், கடந்த காலத்தில் டிரம்ப் கூறிய 61 பில்லியன் டொலர்கள் தற்பொழுது 10 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான சந்திப்பின் போது, வர்த்தக உடன்பாடுகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சந்திப்புக்குப் பிறகு, இரு தரப்பும் பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளிக்கொணரவில்லை.
இருப்பினும், 30 நாட்களுக்குள் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டோம் பாதுகாப்பு திட்டம் அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்காது. அது தனி ஒப்பந்தமாக அமையும்,” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.