பனாமா கால்வாயை பிடிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்கும் டிரம்ப்
பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றாக பனாமாகால்வாய் உள்ளது.
அமெரிக்க இராணுவத்திற்கு டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பு
இந்நிலையில் அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் மீண்டும் பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு வழிகாட்டுதல் என்ற இரகசிய ஆவணம் பனாமா கால்வாயை தடையின்றி அமெரிக்கா பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை இராணுவத்திடமிருந்து கோரியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இது குறித்த கேள்விக்கு பென்டகன் உடனடியாக பதிலளிக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது. இந்த இடைக்கால ஆவணம் குறித்த தகவலை முதன்முதலில் சிஎன்என் வெளியிட்டுள்ளது.
அதேசமயம் பனாமா கால்வாயிற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குமாறு அமெரிக்க இராணுவத்தை டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது என என்பிசி தெரிவித்துள்ளது.
பனாமா கால்வாயை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயற்படக்கூடும் என தெரிவித்துவரும் டிரம்ப் , அமெரிக்கா பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.