வெனிசுலா மக்களை பணக்காரர்களாக மாற்றுவோம் ; அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்
வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது. வெனிசுலா மக்களை பணக்காரர்களாகவும், சுதந்திரமானவர்களாவும், பாதுகாப்பானவர்களாவும் மாற்றுவோம் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாக பல நாட்களாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நேற்று (03) காலை வெனிசுலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரிய தாக்குதல்
தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில், “நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை எனது உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவத்தினர் வெனிசுலா தலைநகரில் மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் தரை வழி, கடல் வழி, வான்வெளி என முப்படைகளும் சேர்ந்து மிகப் பிரமாண்ட தாக்குதலில் ஈடுபட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத மிகப் பெரிய தாக்குதல் இது. சட்டவிரோதி சர்வாதிகாரி மதுரோவை நீதியின் முன் நிறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்க இராணுவத்தின் வலிமையை பிரமிக்க வைக்கும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானது இது. வெனிசுலா மக்களை பணக்காரர்களாகவும், சுதந்திரமானவர்களாவும், பாதுகாப்பானவர்களாவும் மாற்றுவோம்.
சர்வாதிகாரி மதுரோ, மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் விசாரணைக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.
அவர்கள் இருவரும் இப்போது ஒரு கப்பலில் உள்ளனர். அந்தக் கப்பல் நியூயார்க் செல்லவிருக்கிறது. அதன்பின்னர், நியூயார்க் மியாமி அல்லது புளோரிடாவுக்கு இடையே ஒரு முடிவெடுக்கப்படும் என கருதுகிறேன்” என்றார்.