அமெரிக்க வரி விதிப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் கனடாவின் ஹமில்டன் நகர மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உருக்கு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட வரிகளை இரட்டிப்பாக்கியிருப்பது கனடாவின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தியாளருக்கு "பேரழிவாக" அமையும் என ஹாமில்டன் நகர மேயர் ஆண்ட்ரியா ஹார்வத் தெரிவித்துள்ளார்.
"இது ஹாமில்டனுக்கே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இங்குள்ள நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும்," என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் ஹாமில்டனில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா, 2023ஆம் ஆண்டில், அமெரிக்காவுக்கான உருக்கு இறக்குமதியில் 25% பங்கு வகித்த மிகப்பெரிய விநியோகஸ்தராக இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாயன்று டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் அடிப்படையில், இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட 25% வரி 50% ஆக உயர்த்தப்பட்டது.
இது நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கலாம் என ஹார்வத் தெரிவித்தார்.
"மார்ச்சில் வரிகள் முதன்முதலில் விதிக்கப்பட்டபோது நிறுவனங்கள் அதனை குறுகிய காலத்தில் தாங்கக்கூடியதாக கூறின. ஆனால் தற்போது உயர்த்தப்பட்ட வரி பேரழிவை ஏற்படுத்தும்,” என சுட்டிக்காட்டியுள்ளார்.