எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே தொலைக்காட்சி நிருபர் சுட்டு கொலை!
ஆப்கானிஸ்தானில் பத்திரிகை நிருபர்களுக்கு தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.
எனினும், திட்டமிட்டபடி கடந்த 1ந்தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது. இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்நாட்டு நிதியமைச்சகத்தின் ஊடக அதிகாரியாக பணியாற்றி வருபவர் நிமத் ரவான். தொலைக்காட்சி நிருபராகவும் உள்ள இவர் கந்தகார் நகரில் தனது டொயட்டா கரோல்லா காரில் வந்துள்ளார்.
அவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி காரில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன்பின்னர் அவரது செல்போனையும் பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த ரவான் உயிரிழந்து விட்டார்.
ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்புடன் இணைந்து ஊடக அமைப்பினர் செயல்படுகின்றனர் என தலீபான் பயங்கரவாதிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் வைக்க வேண்டும்.
காபூல் நிர்வாகத்தின் பிரசார ஊதுகுழலாக அவர்கள் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தனர். தலீபான் பயங்கரவாதிகள் பத்திரிகை நிருபர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.