ட்விட்டர் நிறுவனத்திற்கு 1,100 கோடி அபராதம்!
ட்விட்டர் நிறுவனத்திற்கு சுமார் இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்ததற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி சமூக வலைத்தளமாக ட்விட்டர் திகழ்ந்து வருகிறது. ட்விட்டரில் கணக்கு தொடங்குவதற்கு தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். ட்விட்டர் பயனர்களின் பாதுகாப்பிற்காக இந்த தகவல்களை ட்விட்டர் நிறுவனம் பெற்று வைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்து குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப ட்விட்டர் உதவியதாக புகார் எழுந்தது.
இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் பெடரல் டிரேட் கமிஷன் சார்பாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் முடிவில் ட்டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் இந்திய மதிப்பில் ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயனர் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.