கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்— சோகத்தில் மூழ்கிய குடும்பம்
கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வார இறுதியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சனிக்கிழமையன்று ஸ்டர்ஜன் நீர்வீழ்ச்சியின் வேகமான நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயது சிறுவன் பாறைகளில் நழுவி நீரில் விழுந்துள்ளான். அவனைக் காப்பாற்றும் நோக்கில், 13 வயது சிறுவனும் உடனடியாக நீரில் குதித்துள்ளான்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவருமே நீரோட்டத்தில் சிக்கி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரெகன் பால்ஸ் ட்ரெயல் பகுதியில் நபர் நீரில் மூழ்கியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
லாக் டு பொன்னெட் பிரிவின் அதிகாரிகள், ஹட்டேரியன் அவசர நீர் மீட்புக் குழு மற்றும் மணிடோபா கடற்படைப் பிரிவு ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
நீர்நிலைகள் மற்றும் கரைப் பகுதிகளைக் கண்காணிக்க டிரோன்கள் மற்றும் சோனார் பொருத்தப்பட்ட படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களும் தங்களது சொந்தப் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைக்கு உதவி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தேடியும் சிறுவர்கள் கண்டறியப்படாததால், இந்த நடவடிக்கை தற்போது உடல்களை மீட்பதற்கான செயல்பாடாக மாறியிருக்கக் கூடும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலத்தில் நீர்நிலைகள் மற்றும் சாலைகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.