முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகள்: இருவர் கைது
முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதலாவது சம்பவத்தில், குயல்ப் (Guelph) நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஜூலை மாதத்தில், 90 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்நபர், தான் ஒரு வங்கி அதிகாரி எனப் பொய்யாகக் கூறி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை "அழிக்க வேண்டும்" என நம்பவைத்து, நேரில் சென்று அவற்றைப் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டாலர்களை அவர் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, அவர் மீது 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி மற்றும் கடன் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதேபோன்ற மற்றொரு மோசடிச் சம்பவம் ஹாமில்டன் (Hamilton) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அங்கு வங்கியின் புலனாய்வு அதிகாரி போலப் பேசிய ஒருவர், முதியவர் ஒருவரின் வங்கிக் கணக்கு பணமோசடி நடவடிக்கைகளில் சிக்கியுள்ளதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார்.
அந்தப் பணத்தைப் பாதுகாப்பான வேறொரு கணக்கிற்கு மாற்றுமாறு அவர் அறிவுறுத்தியதை நம்பி, முதியவரும் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஹாமில்டனைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 5,000 டாலருக்கும் அதிகமான நிதி மோசடி மற்றும் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.