கனடாவில் படகு விபத்தில் 2 குழந்தைகள் பலி
கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் மேற்கு கலிடோனியா அருகே இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
லேக் ராசினியோல் ஏரியில் படகு விபத்துக்குள்ளானதாக அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கை
அந்த இடத்துக்கு அவசர சுகாதார சேவை (EHS), தீயணைப்பு படை மற்றும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் (JRCC) விரைந்தனர்.
நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த 45 வயது ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு தேடுதல்-மீட்பு ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த ஆண் மற்றும் மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.