இந்தியாவில் பறக்கும் மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலி
இந்திய ஆந்திர பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த பறக்கும் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அனகாபள்ளி பகுதியில் வீதியில் பறக்கும் மேம்பாலம் கட்டுமான பணி ஒன்று நடந்து வருகிறது. இந்த சாலையானது கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்ததில் கீழே சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் லாரி ஒன்றும் சிக்கி கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்து துணை பொலிஸ் கண்காணிப்பாளர் ஸ்ரவானி தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி சரியாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த பாலம் ஏன் இடிந்து விழுந்தது பற்றி நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம். 5 பேரை இதுவரை மீட்டு காப்பாற்றியுள்ளோம். அவர்கள் எங்களிடம், 2 பேர் சிக்கி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது என கூறியுள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.