பிரம்டனில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்
பிரம்டனில் இன்றைய தினம் அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குயின்ஸ் வீதிக்கு அருகாமையில் கேட்வே போல்வார்ட் என்னும் முகவரியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன் போது இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வீழ்ந்து கிடப்பதனை அவதானித்துள்ளனர்.
எவ்வாறெனினும், ஒருவரின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்து விட்டதாகவும் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தந்தையர் தின நிகழ்வு நடைபெற்றதாகவும் இந்த சம்பவம் பற்றிய விபரங்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
தந்தையர் தினம் நடைபெற்ற பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவே ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், நிகழ்வு நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.