கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

திடீரென வில்லியாக மாறிய நண்பி
இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார். ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர். நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.