இந்தியாவிற்கு பிரித்தானியா வழங்கிய 600க்கும் மேற்பட்ட முக்கிய மருத்துவ சாதனங்கள்!
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 600க்கும் மேற்பட்ட முக்கிய மருத்துவ சாதனங்களை இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் ஞாயிற்று கிழமை அறிவித்து உள்ளது.
இவற்றில் வென்ட்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த உதவியானது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு முக்கிய மருத்துவ சிகிச்சை வழங்க இந்திய அரசால் பயன்படுத்தப்படும் என்று இங்கிலாந்து தூதரக அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த மருத்துவ உபகரணங்கள் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவை வருகிற செவ்வாய் கிழமை காலை புதுடெல்லி வந்தடையும். பின்னர் மற்ற உபகரணங்கள் வார இறுதிக்குள் வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் ஆக்சிஜன் உபகரணம், வளிமண்டலத்தில் உள்ள காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்து இழுத்து நோயாளிகளுக்கு வழங்க வகை செய்யும். இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையான மருத்துவமனைகள் அவற்றை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
மத்திய அரசுடன் இணைந்து இங்கிலாந்து பணியாற்றி வருகிறது. இதனால் வரும் நாட்களில் கூடுதலாக என்ன உதவிகளை செய்ய முடியும் என்று அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படும் என்றும் தூதரக அறிக்கை தெரிவித்து உள்ளது.