சமூக வலைதளங்களில் தவறானபுகைப்படங்கள்; காலக்கெடு விதித்த பிரித்தானியா !
பிரித்தானியாவில் சமூக வலைதளங்களில் ஒருவரின் தவறானபுகைப்படங்கள் அனுமதியின்றி பகிரப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த புகைப்படத்தை நீக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
இணையதளங்களில் ஒருவரின் அனுமதியின்றி பகிரப்படும் தவறான புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக பிரித்தானிய அரசு புதிய மற்றும் கடுமையான சட்டத் திருத்தங்களை அறிவித்துள்ளது.

48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்
இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதோடு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அந்த நிறுவனங்களின் சேவைகளை முடக்கும் அதிகாரமும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஒருமுறை புகார் அளிக்கப்பட்ட அதே படம் மீண்டும் பதிவேற்றப்படுவதைத் தடுக்க 'Hash-matching' போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறானபடங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பகிரப்படும் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிரித்தானிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom, இது குறித்த இறுதி முடிவை மே மாதம் அறிவிக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.