உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதா...மறுப்பு தெரிவித்த ஈரான்
ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு ஈரான் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க உக்ரைன் விமானம் ஒன்றை, காபூல் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.
அந்த விமானம் காபூலில் இருந்து உக்ரைன் நாட்டு மக்களை மீட்டுவிட்டு சொந்த நாடு திரும்பி கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த ஆயுதமேந்திய கும்பலால், விமானம் ஈரான் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை உக்ரைன் மற்றும் ஈரானின் விமானப்படை தளபதிகள் மறுத்துள்ளனர்.
உக்ரைன் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்றிரவு மஷாத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் உக்ரைனுக்கு சென்றதாக ஈரானின் விமானத் தளபதி கூறினார். தற்போது அது கிவ்-வில் தரையிறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.