அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவி பெறும் உக்ரைன்!
உக்ரைன் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க 1.7 பில்லியன் டொலர் நிதியுதவி அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து உக்ரைன் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் விட்டு வெளியேறிய நிலையில், சில வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், சில வைத்தியசாலைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்கிறார்கள்.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டொலர் நிதி உதவியை உக்ரைன் பெறுகிறது.
இந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, உக்ரைன் சுகாதார மந்திரி கூறுகையில், "போரின் பெரும் சுமை காரணமாக" ஒவ்வொரு மாதமும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மிகவும் கடினமாகி வருகிறது.
"$1.7 பில்லியன் என்பது மற்றொரு நிதி உதவி அல்ல; இது ஒரு முதலீடாகும், இது நம்மை வெற்றிக்கு ஒரு படி நெருங்க வைக்கிறது" என்று கூறினார்.