அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஸெலன்ஸ்கி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.
ஸெலன்ஸ்கியின் கருத்து
உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அடுத்து ஸெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து காணொலியொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில் “ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
இங்கிலாந்து உட்பட ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தின் நிலைப்பாடும் இதுதான்.
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது எமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு.
எங்களுக்குத் தேவை அமைதி, முடிவில்லாத போர் அல்ல. அதனால்தான் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இதற்கு முக்கியம் என்று நாங்கள் கூறுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.