தாய்லாந்து விமான நிலையத்தில் சிக்கிய உக்ரேனிய பெண்மணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
தாய்லாந்தில் 116 உயிருள்ள ஆமைகளுடன் விமானத்தில் ஏற முயன்ற உக்ரைன் பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று பிற்பகல் பாங்காக்கில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா தலைநகருக்கு விமானத்தில் செல்ல முயன்றுள்ளார் குறித்த பெண்.
இந்த நிலையில், அவரது பைகளை சோதனையிட்ட அதிகாரிகள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவரிடம் இருந்து 14 கதிர்வீச்சு ஆமைகள், 98 ஆப்பிரிக்க பான்கேக் ஆமைகள் மற்றும் நான்கு அல்டாப்ரா ராட்சத ஆமைகள் என மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாக்கப்படும் உயிரனங்களை கடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தான்சானியாவிலிருந்து 20 மணிநேர பயணத்தில் அனைத்து ஆமைகளும் உயிர் பிழைத்துள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரேனிய பெண்மணி கடத்திவந்த ஆமைகள் அனைத்தும் அரியவகை என்பதால், யானை தந்தம் அல்லது தங்கம் போன்று பல ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்படலாம் என கூறுகின்றனர்.
குறித்த உக்ரேனிய பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட ஆமைகளின் மதிப்பு தோராயமாக 20,000 பவுண்டுகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்-மியான்மர் எல்லைகள் மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பொதுவாக இதுபோன்ற அரியவகை உயிரினங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகவே காணப்படுகிறது.