தாயகத்திற்கு திரும்பும் உக்ரேனியர்கள்!
ஐரோப்பிய யூனியனில் இருந்து சுமார் 3 மில்லியன் அகதிகள் மீண்டும் தங்களது சொந்த நாடான உக்ரைனுக்கு திரும்பி இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய படைகள் தங்களது முழுநீள போர் தாக்குதலை உக்ரைன் மீது அறிவித்ததில் இருந்தே பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என மில்லியன் கணக்கான பொதுமக்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு அகதிகளாக சென்று இருந்தனர்.
அந்தவகையில் கிட்டத்தட்ட 12 மில்லியன் உக்ரைன் மக்கள் போலந்து , அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இவற்றில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளிலேயே அகதிகளாக தஞ்சமடைந்து இருந்த நிலையில், தற்போது சுமார் 3 மில்லியன் உக்ரைனிய அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டதாக ஐரோப்பிய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் 3.7 மில்லியன் மக்கள் அகதிகளாக இருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.