பிள்ளைகளையும் உடல் உறுப்புகளையும் உணவுக்காக விற்கும் மக்கள்: வெளிவரும் பகீர் தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்கள், சொந்த பிள்ளைகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளும் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கும் நாடுகளும் ஆப்கானிஸ்தானை இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீட்க உதவ முன்வர வேண்டும் என ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கட்டார் நாடுகளின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானுக்காக மட்டும் 4.4 பில்லியன் டொலர் நிதியை திரட்டவும் ஐக்கிய நாடுகள் மன்றம் முடிவு செய்து.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானுகாக அளிக்கப்பட்டிருந்த 9 பில்லியன் டொலர் நிதியை முடக்கியது. மேலும், தற்போதைய சூழலில் 23 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
சுமார் 95% மக்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை எனவும், 9 மில்லியன் மக்கள் கடும் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனடி நடவடிக்கை இல்லாமல் போனால் ஆப்கானிஸ்தானில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என ஐ.நா மன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மக்கள் ஏற்கனவே தங்கள் பிள்ளைகளையும் உடல் உறுப்புகளையும் உணவுக்காக விற்பனை செய்யும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும், இந்த நிலையில், பிரித்தானியா 380 மில்லியன் டொலர் தொகையும்,
ஜேர்மனி 220 மில்லியன் டொலர் தொகையும் கட்டார் 75 மில்லியன் டொலர் தொகையும் அளிக்க முன்வந்துள்ளதாக ஐ.நா தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா சார்பில் மனிதாபிமான அடிப்படையில் 204 மில்லியன் டொலர் அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.