இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
அமெரிக்க அரசாங்கம் உலகளவில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மீது நேற்று புதிதாக பொருளாதர தடை விதித்தது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா டிரோன்கள் உற்பத்திக்கு உதவுவதாக கூறி ஈரான், சீனா, அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பொருளாதார தடை விதித்தது.

32 நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை
அத்துடன் இந்திய நிறுவனம் ஒன்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தை சேர்ந்த ரசாயன உற்பத்தி நிறுவனமான பார்ம்லேண் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அரபு அமீரக நிறுவனத்துடன் இணைந்து ஏவுகணை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்குளோரேட் ரசாயத்தை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்து தடை விதித்தது.
அதேவேளை ஒரு நாட்டின் மீதோ அல்லது ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் மீது மற்றொரு நாடு அல்லது ஐ.நா. போன்ற அமைப்பு நிதி மற்றும் வணிக வரையறைகளை விதிப்பது பொருளாதார தடை எனப்படும்.
இதன் நோக்கம், குறிப்பிட்ட நாடு அல்லது நபர் சட்டவிரோதமான, மனித உரிமை மீறலான, அல்லது உலக அமைதிக்கு அச்சுறுத்தலான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அல்லது அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கொள்கையை மாற்றச் செய்வதாகும். பொதுவாக வல்லரசு நாடான அமெரிக்காவே அதிக அளவிலான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த பொருளாதார தடைகள் மூலம் அமெரிக்காவிலோ அல்லது நட்பு நாடுகளிலோ தடை பெற்ற நிறுவனமோ அல்லது நபரோ பொருளாதார ரீதியாக எவ்வித வர்த்தகத்திலும், தொழிலும் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.