ஈரான் குறித்து அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
கட்டார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (11) சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாட்டினை எட்டுவதற்கான ஓர் அறிகுறியாக இது, பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த நிதி விடுவிப்பு குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அத்தோடு சில அமெரிக்க அதிகாரிகள் இந்தத் தகவலை மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கும் இந்த நடவடிக்கையானது, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதோடு நேரடித் தொடர்புடையது என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு முழுமையான போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான முதற்கட்ட முயற்சியாகக் கருதப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.