ஹமாஸ் போரினை இடைநிறுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகள்
காசாவில் மனிதாபிமான போர் இடைநிறுத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டு தங்கியுள்ளார்.
கடந்த வாரம் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கும் விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார்.
தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளார்.
தொடர்ந்து காசா மீதான தாக்குதல்களை இடைநிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடலை நடாத்தினார்.
இதன்போது பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான இடைநிறுத்தங்கள் குறித்த சாத்தியக்கூறுகள் பொது மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் மற்றும் பணயக் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஹமாஸிடம் பணயக்கைதிகளாகவுள்ள அமெரிக்கப் பிரஜைகள் உட்பட பல குழந்தைகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஜோ பைடன் இஸ்ரேலியப் பிரதமருடன் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.