விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படை விமானம்; தேடும் பணியில் சீனா உள்ளிட்ட பல நாடுகள் கடும் போட்டி!
அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூஎஸ்எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட அதிநவீன போர் விமானம் எப்-35 தென் சீனக் கடலில் விழுந்து நொறுங்கியது.
அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்பு கூறி உள்ள நிலையில் அதன் புதிய படங்களும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த விமானத்தின் மதிப்பு 10 கோடி அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ. 750 கோடி என கூறப்படுகின்றது.
கடற்படை கேரியரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் ஜெட் வேகமாக கப்பலை நெருங்கி வருவதைக் காட்டுகிறது, அங்கு திடீரென புகை தோன்றுகிறது. இந்த வீடியோ வெளிவந்த பிறகு, அவை உண்மையானவை என்பதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியது.
அதேவேளை முன்னதாக கடலில் ஜெட் மிதப்பதைக் காட்டும் ஒரு படத்தை சிஎன்என் முதலில் வெளியிட்டது. கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனா மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது.
விபத்துக்குள்ளான போர் விமானம், பல்வேறு அதி நவீன ரகசிய சாதனங்களால் நிறைந்தது. அது விழுந்த இடம் சர்வதேச எல்லைக்குள் வருவதால் பலநாடுகளும் அதைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பலநாடுகளும் இத்தனை சிரமப்பட்டு அந்த போர் விமானத்தைக் கடலில் தேடக்காரணம் இந்த விலை உயர்ந்த போர் விமானத்தின் பின்னிருக்கும் ரகசிய போர் தொழில்நுட்பங்கள்தான் என கூறப்படுகின்றது.
விபத்துக்குள்ளான விமானத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த போர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தன்னிடமுள்ள தரவுகளைப் பகிரும் வலையமைப்பைக் கொண்டது.
தாழ்வாகப் பறந்து கண்காணிக்கும் திறன் கொண்ட, விமானம் தாங்கிக் கப்பலில் இருந்தே புறப்பட்டு அதிலேயே தரையிறங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படையின் முதல் விமானம்.
பெரிய இறக்கைகள், அருமையான தரையிறங்கும் அமசங்களை கொண்டிருப்பதால், விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஏவும் முறையில் செலுத்த கச்சிதமாக ஏற்ற விமானம் இது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமான என்ஜினைக் கொண்டது.
இந்த விமானம் மணிக்கு 1,200 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது என்றும், அதன் வெளியே இரு ஏவுகணைகள், உள்ளே நான்கு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.