2025 ஆம் ஆண்டில் 85,000 விசாக்கள் ரத்து செய்த அமெரிக்கா
2025 ஆம் ஆண்டு 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமுல்படுத்தி வருகிறார்.

85,000 விசாக்களில் 8,000 விசாக்கள் மாணவர்களுடையது
அந்த வகையில், ஹெச் 1பி விசாவுக்கு புது கட்டுப்பாடுகள், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடுமையான குடிவரவு கொள்கை மற்றும் எல்லை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என ட்ரம்ப் படத்தோடு வெளியிடப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்த உத்தரவை எப்போதும் நிறுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை இவ்வாறு ரத்து செய்யப்பட்ட 85,000 விசாக்களில் 8,000 விசாக்கள் மாணவர்களுடையது என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.