அமெரிக்க பயணிகளுக்கு அனுமதி... எப்போது முதல்? பிரதமர் ட்ரூடோ முக்கிய தகவல்
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க பயணிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் மத்தியில் இருந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க பயணிகளை கனடாவில் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, செப்டம்பர் தொடக்கத்தில் இருந்தே, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், உலகின் எந்த நாடுகளில் இருந்தும் கனடாவுக்கு வந்து செல்லலாம் எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை மாகாண முதல்வர்களும், பெடரல் அமைச்சர்களும் அடுத்த வார தொடக்கத்தில் அறிவிப்பார்கள் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கனடா-அமெரிக்க எல்லையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் ஜூலை 21 அன்று காலாவதியாகும்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு காலக்கெடுவை 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடியர்களின் தடுப்பூசி பெற தகுதியான சுமார் 80% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், 50% மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சூழலில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது தினசரி 500கும் கீழ் வந்துள்ளது. மட்டுமின்றி கொரோனா இறப்புகளும், மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் சரிவடைந்துள்ளது.
ஆனால், அமெரிக்காவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 56.5% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.