அமெரிக்காவில் வேலை பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; ட்ரம்பின் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அந்நாட்டில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கட்டணம், வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது தகுதியான மாணவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற முடிகிறது. சமீபத்தில் எச்-1பிவிசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்க கோர்ட் தடை விதித்தது.
இதையடுத்து, அதே அளவிலான கட்டணத்தை புதிய திட்டத்தின் மூலம் அமல்படுத்தும் வாய்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை பெரிதும் நம்பியுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த கட்டணம் குறித்து இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.