கொரோனா தடுப்பூசி கருச்சிதைவை ஏற்படுத்துமா? கனேடிய மருத்துவரின் பதில்
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கருச்சிதைவு ஏற்படும் என உலாவும் தகவல் வெறும் கட்டுக்கதை என ஆல்பர்ட்டாவின் முதன்மை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் தீனா ஹின்ஷா (Deena Hinshaw), இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை பேசியுள்ளதாகவும், பலர் இன்னமும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்பி சிக்கலுக்கு உள்ளாகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மக்கள் கட்டாயம் நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ள மருத்துவர் ஹின்ஷா, இந்த பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணி தாயும் சேயும் நலமுடனும் பாதுகாப்பாகவும் இருப்பது முக்கியம். இதுவரை மருத்துவ உலகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கொரோனா தடுப்பூசியால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடவே இல்லை.
உண்மையில், கொரோனா தொற்றுநோய்க்கு முன் 2019ல் இருந்தே ஆல்பர்ட்டாவில் கருச்சிதைவு ஏற்படும் எண்ணிக்கை லேசாக சரிவைக் கண்டுள்ளது என்றார் மருத்துவர் ஹின்ஷா.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை மாறுதல் ஏதுமின்றி தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்ப்பமாக இருப்பவர்கள், கர்ப்பமாக திட்டமிடுபவர்கள் அல்லது சமீபத்தில் பிரசவித்தவர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் மிக்கவை என்றார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள், தொற்றின் தாக்கத்தில் இருந்து சேயுடன் சேர்ந்து பாதுகாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..