பெண்களுக்கு எதிரான வன்முறை; பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்
பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் பாராளுமன்றத்திற்கு வெளியே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் லண்டனில் பொலிஸ் ஒருவரால் கடத்தி கொல்லப்பட்ட இளம் பெண் சாரா எவரார்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை பொலிஸார் எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும் பொதுமக்கள் பலர் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
சுமார் 5 மணியளவில் பாராளுமன்ற வளாகம் அருகே திரண்ட மக்கள் கூட்டம், பொலிசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இளம் பெண் சாரா எவரார்ட் கொலை தொடர்பில் நீதி கேட்டு போராடும் அதே வேளையில், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கவும், பொலிசாருக்கும் உளவிவகார செயலருக்கும் அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை திரும்ப பெறக்கொரியும் பொதுமக்கள் முழக்கமிட்டனர்.
எனினும் குறித்த மசோதாவை போரிஸ் அரசாங்கம் ஆதரிப்பதுடன், பொலிசாருக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.
மேலும் இதுபோன்ற மசோதாக்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாக உள்ளதாக ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாராளுமன்ற வளாகம் அருகே கூட்டம் கூடுவது முறையல்ல எனவும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.