தாய்லாந்து - கம்போடியாவில் மீண்டும் போர் பதற்றம்
தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக திடீர் மோதல் வெடித்தது.

டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம்
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர். எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள்.
போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் உபோன் ரட்சதானி மாகாணத்தில் கம்போடியா படைகள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதற்கு தாய்லாந்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்தது.
ஆனால் தாய்லாந்து தான் முதலில் தாக்கியதாக கம்போடியா கூறியது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.
பின்னர் போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்தியதனால் கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.