ஜேர்மனியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
ஜேர்மனியில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுக்களால், கடந்த ஆண்டிலிருந்ததைவிட நிலைமை மோசமாகும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் புதிதாக தொற்றுக்கள் அதிகரிப்பதைத் தடுக்க உதவும் வகையில், ஈஸ்டர் பண்டிகையின்போது வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahnம், மக்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், சுகாதார விதிகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றுமாறும், பெரிய அளவிலான கூட்டங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை கொரோனாவால் புதிதாக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது என்று கூறியுள்ள Robert Koch நிறுவனத்தலைவரான Lothar Wieler, இது இப்படியே தொடருமானால், ஏப்ரலில் நமது மருத்துவமனைகள் கடுமையான சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.
ஜேர்மனி கொரோனாவின் மூன்றாவது அலையின் துவக்கத்தில் உள்ளது என்று கூறியுள்ள அவர், பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிர கொரோனா இப்போது நம் நாட்டில் அதிகம் காணப்படுகிறது என்றார். அத்துடன் அந்த வைரஸ் மிகவும் பயங்கரமாக பரவக்கூடியது, மிகவும் அபாயகரமானது என்றும் Lothar Wieler கூறியுள்ளார்.
எனவே அதை தடுப்பது மிகவும் கடினம் என்றும், ஆகவே, முதல் இரண்டு அலைகளைவிட ஜேர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.