வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு ; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று (27) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகின்றது. சந்தேக நபர் திங்களன்று வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட போது, அவர் மீது இரண்டு துப்பாக்கிக் குற்றங்களும் சுமத்தப்பட்டன.

எனினும் சந்தேக நபர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் வருடாந்திர ஆடம்பர சந்திப்பான வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க இரவு விருந்தில், 31 வயதான கோல் டோமஸ் ஆலன் என்பவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் சனிக்கிழமை (25) நடத்தப்பட்டது.
ஒரு ஹோட்டலில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, ரகசிய சேவை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் அடைந்தார்.
இந்தச் சம்பவம், அமெரிக்காவில் தொடர்ச்சியாக நிகழும் அரசியல் வன்முறைகளின் அண்மைய நிகழ்வாகும். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மினசோட்டா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது கணவரும் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர், கடந்த செப்டம்பரில் பழமைவாத அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் ஒரு பேரணியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேவேளை 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் மீதே இரண்டு கொலை முயற்சிகள் குறிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.