கியூபெக் தண்ணீர் பூங்காவில் துப்பாக்கிதாரி: பொதுமக்கள் வெளியேற்றம்
கியூபெக்கில் Mont Cascades தண்ணீர் பூங்காவில் மர்ம நபர் துப்பாக்கியுடன் நடமாடிய நிலையில், மொத்த பொதுமக்களையும் வெளியேற்றியுள்ளனர்.
Mont Cascades தண்ணீர் பூங்காவில் புதன்கிழமை மாலை நேரம் சுமார் 4 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களை வெளியேற்றியுள்ளனர்.
அங்குள்ள ஊழியர் பெண் ஒருவரை துப்பாக்கியால் மறைந்திருந்து குறி பார்த்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அச்சத்தில் உறைந்த அந்த ஊழியர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரியின் நடமாட்டம் தொடர்பில் தகவல் தெரியவந்த பொலிசார் உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கியால் எவரும் சுடப்படவில்லை என்பதுடம், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு டசின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்தனர். மட்டுமின்றி அப்பகுதி முழுமையாக தேடுதல் நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
ஆனால், சந்தேகமளிக்கும் வகையில் பொலிசாரால் எவரையும் கண்டறிய முடியவில்லை என தெரிய வந்துள்ளது. குறித்த பெண் ஊழியரை துப்பாக்கியால் குறி வைத்த அந்த மர்ம நபர்கள் இருவர், சட்டென்று அப்பகுதியை விட்டு மாயமானதாக பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த நபருக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும் எனவும், ஆங்கிலம் பேசும், கருமையான தலை முடி கொண்டவர் எனவும், பச்சை நிற சட்டை அணிந்து முகத்தில் மாஸ்க் வைத்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரிடம் அந்த நபர் இதுவரை சிக்காத நிலையில், அப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.