கனேடியர்கள் எப்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும்?
கனேடியர்கள் எப்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும்? பயணம் பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் கனேடிய தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர்.
ஆறு மாதம் வேலை, ஆறு மாதம் சுற்றுலா என்றே வாழ்வை செலவிடும் ஏராளமான மேலை நாட்டவர்கள், எப்போது மீண்டும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியும் என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில், எப்போது பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்ற கேள்வி கனடாவிலும் எழுந்துள்ளது.
கனேடிய தொற்றுநோயியல் நிபுணரும், Ottawa பல்கலைக்கழக இணை பேராசிரியருமான ரேவாட் ஷங்கர் தியோநந்தன் (Raywat Shanker Deonandan), மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெறுவது வரையில் அவர்கள் சுற்றுலா செல்வது குறித்து தன்னால் எண்ணிக்கூட பார்க்கமுடியாது என்கிறார்.
கனடாவைப் பொருத்தவரை, ஒரு டோஸ் தடுப்பூசிக்கும், அடுத்த டோஸ் தடுப்பூசிக்கும் இடையில் நான்கு மாதங்கள் வரை இடைவெளி காணப்படுகிறது.
ஆக, இலையுதிர் காலம் வரையில் சுற்றுலாவுக்கு வாய்ப்பில்லை. மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெறுவது வரையில் அவர்கள் சுற்றுலா செல்வது சரியில்லை, அப்படித்தான் இருக்கவேண்டும், ஆனால், நமது அரசியல்வாதிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒருவேளை, ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுற்றுலா செல்லலாம் என அனுமதியளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் தியோநந்தன்.
மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் கூட, திடீர் மாற்றம் பெறும் கொரோனா வைரஸ்களால் அபாயம்ம் இருக்கத்தான் செய்கிறது என்றும் எச்சரிக்கிறார் அவர்.
தடுப்பூசி என்பது குண்டு துளைக்காத உடை அல்ல என்று கூறும் தியோநந்தன், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், உங்களுக்குள் கொரோனா வைரஸ் மறைந்திருந்து, அதன் மூலம் நீங்கள் உங்களுக்குத் தெரியாமலே மற்றவர்களுக்கு நோய் பரப்ப வாய்ப்பு உள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது என்கிறார்.
நீங்கள் எந்த ஊருக்கு சுற்றுலா செல்கிறீர்கள், அங்கு எந்த அளவில் கொரோனா அபாயம் உள்ளது என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயம் என்று கூறும் தியோநந்தன், 2024வரையில் சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்பு இல்லை என்றே தான் கருதுவதாக தெரிவிக்கிறார்.