கொரோனாவுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை: உலக சுகாதார அமைப்பு புதிய அறிவுறுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதனை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த சிகிச்சை முறையில் எந்தப் பயனும் இல்லை. இதனால், தீவிர பாதிப்பு கொண்டோர் குணமடைந்ததாகவோ, வென்டிலேட்டரின் தேவை குறைந்ததாகவோ அதிகாரபூர்வ தரவுகள் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, கொரோனா நோயாளிகளுக்கு ப்ளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட க்ளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே குறித்த சிகிச்சையை அளிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கொரோனா சிகிச்சைக்கு ப்ளாஸ்மாவை பயன்படுத்த பரிந்துரைத்ததும் உலக சுகாதார அமைப்பு தான். இந்த நிலையில் தற்போது ஏன் வேண்டாம் என்று கூறுகிறது என்பதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது.
அதில், தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கொரோனா தொற்றாளர்கள் 16,236 பேர்களில் முன்னெடுக்கப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைத்ததாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் ப்ளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.