கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ?
கனடாவில் இன்னும் 7 நாள்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோவே ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், வெளிவரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் கனடா தேர்தல் முடிவை வேறுவிதமாக மாற்றுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவில் அதிகம் அறிந்த வெளிநாட்டுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் இருக்கும் இந்தியர்கள் மீதான மதிப்பு, குறிப்பாக தமிழ்ப் பண்டிகைகளைக் கொண்டாடுவது போன்றவை ஜஸ்டின் ட்ரூடோ மீதான புகழை இந்தியாவில் அதிகரித்தது.
இதனிடையே, கடந்த 6 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது மூன்றாவது முறையாக பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.
வழக்கமாக, கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறும். இதில் கடந்த இரண்டு முறையாக தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார் ட்ரூடோ. 2015-ல் தனது லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக கனடா நாட்டின் இளம்வயது பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
அதன்பின் 2019 தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடம் கிடைக்காமல் போனாலும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்று பிரதமரானார். கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரண்டாம் முறை ஆட்சியை நடத்தி வந்தவர், தனது ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தனது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி இன்னும் 7 நாள்களில் அதாவது இம்மாதம் 20-ஆம் தேதி கனடா நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. வழக்கம்போல லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஜஸ்டின் ட்ரூடோவும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எரின் ஓ டூல் என்பவரும் இம்முறை போட்டியிடுகின்றனர்.