வொஷிங்டன் வந்த விமானத்தால் அதிகரிக்கும் போர் பதற்றம் ; களமிறங்குமா அமெரிக்கா?
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அணுகுண்டுகளைத் தாங்கும் திறன்பெற்ற டூம்ஸ்டே விமானம் வொஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
போயிங் இ-4பி நைட்வாட்ச் என்ற குறித்த விமானம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மிகப் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக உள்ளது. இது டூம்ஸ்டே என்று அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் போர் பதற்றம்
வொஷிங்டன் விமான நிலையத்துக்கு அருகே விமானப் படைத் தளத்தில் இந்த விமானம் செவ்வாய்க்கிழமை இரவு (17) தரையிறங்கியிருக்கிறது.
லூசியானாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸுக்கு திடீரென பறந்த பிறகு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
அணுசக்தி போர் அல்லது பெரிய மோதல் ஏற்பட்டால் ஒரு மொபைல் கட்டளை மையமாக பணியாற்ற வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அணு குண்டுவெடிப்புகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் மின்காந்த குறுக்கீடுகளைத் தாங்கும் திறன் கொண்டது.
போயிங் நிறுவனத்தால் தயாரிக்க இ-4பி, அமெரிக்க ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய அவசரகாலங்களின் போது உயர் ராணுவ அதிகாரிகளுக்கு வான்வழி தலைமையகமாக செயல்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தொடர்ந்து, இந்த விமானம் வொஷிங்டன் வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
அணு ஆயுதப் போர் அல்லது தேசிய பேரழிவின்போது, அமெரிக்காவை ஆள, வான்வழி இராணுவ கட்டளை மையமாக செயல்படும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டது இந்த விமானம்.
வழக்கமான பயிற்சி அல்லது பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த விமானம் தற்போது வொஷிங்டனில் தரையிறங்கியருப்பது ஏதோ விநோதமான அல்லது இயற்கைக்கு மாறான விடயங்கள் நடக்கப்போவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.