டொராண்டோவில் பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கடந்த பெப்ரவரி மாதத்தில் டொராண்டோ மேற்கு பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை இந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
44 வயதான ஒரு பெண் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பெப்ரவரி 21ஆம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் டொவர் கோர்ட் வீதி Dovercourt Road மற்றும் கிரேய் அவன்யூ Geary Avenue பகுதிக்கு அருகில் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதான டொராண்டோவைச் சேர்ந்த பவுலோ மோட்டா என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 44 வயதான மரியா ரிவெரோ என்ற பெண் கைது செய்யப்பட்டு, இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொலைக்கு முன்பு சந்தேகநபரும், உயிரிழந்தவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்களா என்பதைக் குறித்து காவல்துறை இதுவரை உறுதி செய்யவில்லை.